அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சத்துக்கு உத்தரவாதம் தரவில்லையென்றால் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சிம்பு அரசன் படவிவகாரம்:
நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் திரைப்படம் தயாரிக்க கடந்த 2013ல் திட்டமிட்டது. அப்போது, அந்த நிறுவனத்திற்கும் சிம்புவுக்கும் இடையே சம்பள பேச்சுவார்த்தை நடந்தது. அதில், இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு 1 கோடி சம்பளம் பேசப்பட்டு, 50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது.
ஆனால், இந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை. இதையடுத்து, முன்பண தொகையை திரும்ப தருமாறு சிம்புவிடம் பட நிறுவனம் கேட்டது. அவர் உரிய பதில் தராததால் பணத்தை திரும்ப தர உத்தரவிடக்கோரி பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சத்துக்கு உத்தரவாதம் தரவில்லையென்றால் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிம்புவை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.