பாலியல் குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கேப்மாரி போன்ற படத்தை எடுத்துள்ள இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்கியுள்ள கேப்மாரி என்ற திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் வைபவி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
கேப்மாரி படம் ரொமாண்டிக் காமெடி வகை என்று கூறப்பட்டாலும் படம் வெளியானதிலிருந்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர், பாலியல் குற்றங்கள் பெருகிவரும் இந்த காலத்தில் கேப்மாரி போன்ற படத்தை எடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர், “இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் படத்தைப் பார்த்தேன். அந்த படம் மிகவும் மோசமாக இருக்கிறது. அந்தப் படத்தின் பெயரை சொல்வதற்கே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்தப் படத்துக்கு கேப்மாரி என்று பெயர். அதே மாதிரிதான் அந்த படமும் இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க மக்கள் வருவார்கள் என்று எப்படி நம்பி இதுபோல படம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் எல்லாம் அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். பல கருத்துகளை சொல்கிறார்கள். நாங்கள் நாட்டை மாற்றி அமைக்கப்போகிறோம் என்று கூறுகிறார்கள். இந்த படங்களை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. இந்த படத்தோட வசனம், திரைக்கதை, காட்சிகள் எல்லாம் ரொம்ப மகா மட்டமாக கேவலமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு பாலியல் வன்கொடுமை போன்றவற்றை பார்க்கும்போது எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தால் தவறே இல்லை. இதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.