Advertisment

ரஜினிக்கு அல்ல... மக்கள் ரசனைக்கான விருது

ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களுக்கும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டாராக 20 வருடங்களுக்கு மேலாக திகழும் இந்திய சினிமாவின் தங்க மகுடத்தில் வைரமாக மின்னும்.

author-image
WebDesk
New Update
dadasaheb phalke award, superstar rajinikanth, dadasaheb phalke award winner rajinikanth, rajinikanth achivements in indian cinema, ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மன்னன், தாதாசாகேப் பால்கே விருந்து, rajinikanth achivements in world cinema, திராவிட ஜீவா கட்டுரை, king of tamil cinema, rajinikanth, dravida jeeva article

திராவிட ஜீவா, கட்டுரையாளர்

Advertisment

ஈடுஇணையற்ற சூப்பர் ஸ்டாருக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களுக்கும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டாராக 20 வருடங்களுக்கு மேலாக திகழும் இந்திய சினிமாவின் தங்க மகுடத்தில் வைரமாக மின்னும். இந்த விருது இந்திய மக்களுக்கான விருது. ஆம், எத்தனையோ சகாப்த நடிகர்கள் பிராந்தியத்தில் தோன்றி நடித்தாலும் அவர்கள் இந்தியாவைத் தாண்டியது இல்லை.

மலையாள நடிகர்கள் பிரேம்நசீர், மம்முட்டி, மோகன்லால் கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் சிரஞ்சீவி போன்ற பிராந்திய நடிகர்களால் தங்களது எல்லைகளைத் தாண்டிய வெற்றியை ஓரிரு படங்களைத் தவிர பெறமுடியவில்லை. அதைத் தொடரவும் முடியவில்லை. அந்த அளவுக்கு இந்தி சினிமாவின் தாக்கம் தொண்ணூறுகள் வரை இருந்தது. 1989-ல் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ராஜாத்திராஜா ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிரவைத்தது. அன்று தொடங்கிய ரஜினி ராஜாங்கம் தளபதியில் தனக்கு இணை எவருமில்லை என்கிற உச்சத்திற்குப் போனது. பாட்ஷா பாலிவுட் நடிகர்களையும் பதற வைத்தது என்றால் முத்து உலகையே மிரள வைத்தது.

மக்கள் மனம் கவர்ந்த மன்னனுக்கு மரியாதை

1975ல் திரைத் துறைக்குள் நுழைந்தவர் 1978ல் மக்கள் மனதை சிறைபிடித்தார். இன்றுவரை யாராலும் வீழ்த்த முடியாத, விழ்த்த நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்திலேயே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த் என்னும் சூப்பர்ஸ்டார் ஆவார். ஆம், ரஜினிகாந்த் என்பது மட்டுமல்ல சூப்பர்ஸ்டார் என்பதும் அவரது மற்றொரு பெயர்தான். பதவியும் பட்டமும் ஒருசேர பொருந்தியது இவருக்கு மட்டுமே. உலகில் எந்த நடிகரும் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் உச்சத்தில் இருந்ததே இல்லை என்பதே வரலாறு மட்டுமல்ல, உண்மையும்கூட. ஆனால், 40 வருடங்களாக பொய்ச் செய்திகளாலும் ஊடகச் செய்திகளாலும் பொறாமை செய்திகளாலும் வீழ்த்தப்படுவது போன்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால், ரஜினி என்கிற இமயத்தை எட்டிப்பிடிக்கவில்லை என்பதைவிட தொட்டுக்கூட யாரும் பார்க்கவில்லை இந்திய சினிமாவில் என்பதே கள யதார்த்தம்.

இப்படிப்பட்ட பெரும் புகழுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த்தின் மேற்கூறிய படங்கள் அனைத்தும் கமர்சியல் படங்கள் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படும். கலைப் படமோ கமர்ஷியல் படமோ தயாரிப்பாளர்களுக்கு லாபமும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் தருவதோசு மக்களால் கொண்டாடப்படும் எந்த படமும் சிறப்பான திரைப்படங்கள் தான். மக்கள் தீர்ப்பைவிட ஜனநாயகத்தில் வேறு எந்தத் தீர்ப்பும் சிறந்ததோ பெரியதோ அல்ல. அவ்வகையில் ரஜினி தனது முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மற்ற பிராந்திய நடிகர்களைவிட மட்டுமல்ல அவருக்கு அடுத்த தலைமுறை பிராந்திய நடிகர்களும்கூட தொட முடியாத உச்சத்தில் இருந்து இந்திய சினிமாவை ஆள்கிறார்.

பொதுவாகவே இந்திய சினிமாவின் அடையாளமாக இந்தி சினிமா மட்டுமே இருந்தது. அதையும் உடைத்தது ரஜினியின் சிவாஜி தான். இன்றுவரை யூ கே டாப் டென்னில் இடம் பெற்ற ஒரே திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி தான். இதுவரை இந்திய திரையுலகில் 2000 முதல் 5000 திரையரங்குகள் வரை அதிகமான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும் நடிகர்களில் ரஜினியை தவிர வேறு யாருமே இல்லை என்பதன் மூலம் ரஜினியின் மக்கள் செல்வாக்கு புலப்படும்.

முத்து படம் உலகளாவிய வெற்றி பெற்றது. அதைவிட பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஜப்பான் மக்கள் இடத்திலேயே ரஜினிகாந்த் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஜப்பான் பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் ரஜினி எங்கள் நாட்டை சேர்ந்த நடிகர் என்று பெருமை பேசும் அளவிற்கு ரஜினியின் புகழ் உச்சத்தில் பறந்தது. முத்து படத்திற்கு பிறகு வெளிவந்த படையப்பா 225 திரையரங்குகளில் 65 நாட்களை கடந்து இந்திய திரை உலகில் இன்றுவரை யாராலும் உடைக்க முடியாத சாதனையைப் படைத்தது. அன்றைய முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த படமும் 100 திரையரங்குகளில் தாண்டி ரிலீஸாவதே சாதனை என்கின்ற நேரத்தில் 300 திரையரங்குகளில் ரிலீசாகி 265 திராயரங்குகளில் 65 நாட்களை கடந்த படமாக படையப்பா இந்திய சினிமாவை மிரள வைத்தது. இன்றுவரை இந்த சாதனையை எந்த இந்தியப் படமும் தொட முடியவில்லை என்பது ரஜினியின் வெற்றிக்கான அடையாளமாக பார்க்கப்பட்டது. என்றாலும், ரஜினியின் தோல்வி படத்தையே மற்ற முன்னணி நடிகர்களின் மாபெரும் வெற்றி படங்கள் தொட முடியாத நிலையும் இங்கே தொடர்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2002-ல் வெளியான பாபா திரைப்படம் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது. இது ரஜினியின் இமேஜுக்கு தோல்வி படமாக அன்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இன்று வரை தென்னிந்திய நடிகர்களில் எவரும் இந்த தோல்வி படத்தின் அருகில் கூட நெருங்க முடியவில்லை என்பது ரஜினியின் தோல்விதான். மற்ற நடிகர்களின் சூப்பர்ஹிட் வெற்றி என்கிற அளவிற்கு ரஜினியின் புகழ் கொடி இறங்காமல் பறந்து கொண்டிருப்பது நமது கண்முன் இருக்கும் சாட்சி.

இது மட்டுமல்ல, இந்தி சினிமாவே இந்திய சினிமாவின் அடையாளமாக கருதப்பட்டு வந்தது. அதையும் உடைத்து, ஒரு பிராந்திய மொழி நடிகராக தென்னிந்திய நடிகர்களுக்கான மிகப்பெரிய கதவினை திறந்து வைத்ததும் சாட்சாத் சூப்பர் ஸ்டார்தான். அந்தப் புரட்சியை ஏற்படுத்திய படம் 2007ல் வெளிவந்த சிவாஜி த பாஸ் யூ கே டாப் டென்னில் இடம் பிடித்த முதல் இந்தியப் படம் என்ற வரலாற்று சாதனையை தொடங்கிவைத்த சிவாஜி உலகின் மிக அதிகமான திரையரங்குகளை கைப்பற்றிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. கேசினோ ராயல் என்கின்ற ஹாலிவுட் திரைப்படத்திற்குப் பிறகு மிக அதிகமாக திரையங்குகளில் வெளியான முதல் ஆங்கிலம் தவிர்த்த உலகத் திரைப்பட வரிசையில் இணைந்தது. 850 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த முதல் இந்திய திரைப்படமும் கடைசி திரைப்படமும் சிவாஜி த பாஸ் தான். இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இனி எந்த திரைப்படமும் தரவே முடியாது என்பதுதான் ஈடு இணையற்ற செல்வாக்கிற்க்காண சாட்சியம்.

அவ்வப்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சிவாஜி படத்தின் வசூலை இவர் மிஞ்சிவிட்டார், அவர் வந்து விடுவார் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் நகைப்பிற்குரியதாகவே இருக்கும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி 850 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சிவாஜி 500 திரையரங்குகளில் கூட இரண்டு வாரங்களைக்கூட கடக்காத ஒரு படம் வசூலித்து விட்டதாக எழுதுவது இணையதளத்தில் மட்டுமே சாத்தியம். இணையத்தில் யார் வேண்டுமானாலும் ரஜினியை வெல்லலாம். ஆனால், அவர் வென்று வைத்திருக்கும் இதயங்களை எதிர்த்து யாரும் வெல்லவே முடியாது என்பதற்கு இந்திய கிரிக்கெட் உலகின் பிதாமகன் சச்சின் முதல் இந்தி திரைப்பட சாதனை நாயகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், அக்ஷய்குமார் வரை தலைவா என்று உச்சிமுகர்ந்து கொண்டாடப்படும் ரஜினியை, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரே இன்று தலைவா என்று அழைப்பது சாதாரண செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது. மக்கள் மனதில் மன்னனாக வாழ்ந்துவரும் ஒருவரைத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மதிக்கப்படும் தலைவர்கள் கொண்டாடுவர்.

அவ்வகையில் 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் மன்னனாக வாழும் சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமா என்கிற தங்க கிரீடத்தில் ஜொலிக்கும் வைரமாக இருக்கும். இது ரஜினிக்கான விருது அல்ல, மக்களுக்கான விருது, மக்களின் ரசனைக்காண விருது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajinikanth Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment