இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் சொந்த அத்தை மகனும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமார், நேற்றுமுன்தினம் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். தனது தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் தான் காரணம் என்று தனது வீட்டில் பூஜை அறையில் கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து, சசிகுமார் அளித்த புகாரை தொடர்ந்து, அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள அசோக் குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக் கூடாது என்பதற்காக விமானநிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், "கந்துவட்டி கொடுமையால் நான், கவுதம் மேனன், பார்த்திபன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுளோம். கடனை அடைத்தாலும் ஆவணங்களை அன்புச்செழியன் கொடுப்பதில்லை. கந்துவட்டி கேட்டு தயாரிப்பாளரை மிரட்டினால் இனி நடப்பதே வேறு. 90 சதவீதம் தயாரிப்பாளர்கள் கடனில் உள்ளனர். அனைவரும் ஒன்றுகூடி பிரச்னைக்கு முடிவு கட்டுவோம். அன்புச்செழியனுக்கு ஆதரவாக நிறைய சிபாரிசுகள் வரும். அதனையெல்லாம் மீறி அசோக்குமார் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்யுங்கள்" என்றார்.
இந்த நிலையில், சமூக தளங்களில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், விஷாலும், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் அன்புச் செழியனை புகழ்ந்து பேசியது குறித்து இடம்பெற்றுள்ளது. அதில் பேசும் விஷால், 'என்னை தயாரிப்பாளர் ஆக்கியதே அன்பு அண்ணன் தான்' என்கிறார். ஞானவேல்ராஜாவோ, 'தயாரிப்பாளர் ஆக நினைத்த போது என் வீட்டில் கூட என்னை நம்பி பணம் தரவில்லை. அன்பு அண்ணன் தான் எனக்கு ஃபைனான்ஸ் செய்தார்" என்று கூறியுள்ளார்.
இதையும் கருத்தில் கொள்வோம்... pic.twitter.com/53MbHi8bEg
— Marudhu Alaguraj (@marudhualaguraj) 22 November 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.