அவரவர் துறைகளில் ஜாம்பவான்களாக உள்ள இருவர் வரும் தீபாவளியன்று உங்கள் வீட்டின் தொலைக்காட்சிகள் மூலம் உங்களை சந்திக்க வருகின்றனர். இருவரும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், ரகசியங்கள், வெற்றி, தோல்விகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றனர். அவர்கள் வேறு யாருமல்ல பாலிவுட் சூப்பர் ஹீரோ அமீர் கான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இருவரும் தான்.
விராட் கோலி பொதுதளத்தில் அதிகம் தன்னைக் குறித்து பேசாதவர். ஊடகங்களிலும் அதிகம் தலைகாட்டாதவர் என்ற பெயரும் விராட் கோலிக்கு உண்டு. ஆனால், அமீர்கான் அப்படியல்ல, சினிமாவில் நீண்ட காலமாக கோலோச்சினாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருபவர். இந்த இருவரும் முதன்முறையாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நிகச்சி தயாரிக்கப்படுகிறது. இருவரின் காம்போவையும் நிச்சயம் பார்வையாளர்கள் தவறவிடமாட்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெற்றது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள தனது ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூரிலிருந்த நடிகர் அமீர் கான், இந்நிகழ்ச்சியின் படபிடிப்புக்காக அக்டோபர் 3-ஆம் தேதி காலையில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்தார். படபிடிப்பு முடிந்தபின் அன்றைய நாள் இரவே படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சிக்காக வேறொரு நாடு செல்லவிருக்கிறார் அமீர் கான்.
இந்நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வேலைகளில் குறிப்பிட்ட சேனல் நெட்வொர்க் இறங்கியுள்ளது. இருவரது கலந்துரையாடலையும் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இச்செய்தியை, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படத்தின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.