Actor Surya Tamil News Update : நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் போலி கணக்கு தொடங்கி சிலரிடம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு 2டி எண்டர்டெய்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவன தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்களாக உள்ளன. தற்போது ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், உடன்பிறப்பே ஜெய் பீம், ஓ மை டாக் என 4 படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், 2டி எண்டர்டெய்மெண்ட் என்ற பெயரில் அந்நிறுவன லோகோவை பயன்படுத்தி சமூகவலைதளம் மற்றும் இமெயில் போலி கணக்கு உருவாக்கி நடிகர் நடிகைகள் தேவை என்று மோசடி கும்பலை சேர்ந்த சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பலரும் அவர்களை அழைத்து வாய்ப்பு கேட்டபோது அவர்களிடம் ஜிபே அப் மூலம் பணம் அனுப்புமாறு மோசடி நபர்கள் கூறியுள்ளர். இதேபோல் தங்களை தொடர்புகொண்ட ஒவ்வொருவரிடமும் தலா ரூ3500 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில். இது தொடர்பாக 2டி எண்டர்டெய்மெண்ட் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி இமெயில் மற்றும் விளம்பரங்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil