தன்னிடம் முறைப்படி அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை 'சிக்ஸர்' படக்குழு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருக்கும் நடிகர் கவுண்டமணி, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வால்மேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிக்ஸர். வைபவ் கதாநாயகனாக நடிக்க புதுமுக இயக்குனர் சாக்ஷி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். ராதாரவி, இளவரசு, சதீஷ், ராமர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் நாளை(ஆக.30) வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக கூறி சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள், தினேஷ் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
'சின்னதம்பி' படத்தில் கவுண்டமணி பயன்படுத்திய, 'ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்யமாட்டேன்' , 'முப்பது ரூபாய் கொடுத்தா மூணு நாளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேன் டா' ஆகிய வசனங்கள் சிக்ஸர் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.