சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்டு'ஸ் பெஸ்ட்’ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார்.
இதற்கு பல நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞர், லிடியன் நாதஸ்வரம் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சென்னை திரும்பிய அவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சென்று வரவேற்றதுடன், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டார்.
அதில் பேசிய அவர், “லிடியன் இசையின் மந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரைப் பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. அவரை இந்திய இசையின் தூதராக நினைக்கிறேன். லிடியனின் வெற்றியை எனது வெற்றியாகக் கருதுகிறேன். புறக்கணிக்கப்பட்ட நகரமாக இருக்கும் சென்னைக்கு, உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கியதற்காக லீடியனுக்கு நன்றி” என்றார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.மியூஸிக் கன்செர்வேட்ரி இசைப்பள்ளியில் பயின்றவர் தான் லிடியன். அதாவது ரஹ்மானின் மாணவர். 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில், தனது பியானோவால் தேர்வுக் குழுவினரை மயக்கி, 1 மில்லியன் டாலர் டாலர் பணத்தை பரிசாகப் பெற்றிருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்.
“இது என்னுடைய முதல் போட்டி. பதட்டப் படாமல் வாசித்தேன்” எனும் லிடியனுக்கு, நிலாவில் பியானோ வாசிப்பது தான் கனவாம். 2023-ல் நடக்கும் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்ச்சி நிலாவில் நடக்கவிருக்கிறது. சில இசயமைப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் அதில் லிடியனுக்கும் நிச்சய இடமுண்டு என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்!