இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் எகிறுவதால் லைகா - ஷங்கர் இடையே பூசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக படம் கிடப்பில் போடப்படும் வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசன் ரசிகர்கள் வேதனை அடைகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர், லைகா புரடொக்ஷன்ஸ் ஆகிய இரு பெயர்களுமே இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றுவிட்டவை! இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமான 2.0 இவர்கள் இருவரது கூட்டு முயற்சி. 543 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் அது!
2.0 முடிந்ததுமே இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் மூலமாக கமல்ஹாசனுடன் 22 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இணைகிறார். 2.0-வை பிரமாண்டமாக தயாரித்த லைகா, இந்தப் படத்திலும் ஷங்கருடன் இணைவது இன்னொரு விசேஷம். எனவே இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் சினிமா உலகில் எகிறிக் கிடக்கிறது.
இந்தச் சூழலில் இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் குறித்து இயக்குனர் ஷங்கர் தெரிவித்த தொகையை செலவு செய்ய லைகா தயாராக இல்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே 2.0 படத்திற்கு பெரும் தொகை செலவு செய்த லைகா, அதற்கேற்ப லாபம் பெறவில்லை என தெரிகிறது. தவிர, ரஜினி படம் அளவுக்கு கமல்ஹாசன் படத்திற்கு அதிக பட்ஜெட் ஒதுக்க முடியாது என்கிற நிலையிலும் லைகா இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இயக்குனர் ஷங்கர் - லைகா இடையே பூசல் ஏற்பட்டிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கு தெலுங்கு, இந்தி பட உலகில் இருந்து பட அதிபர்களை ஷங்கர் தேட ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியன் 2 பட வேலைகள் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் லைகா நிறுவனமோ, இயக்குனர் ஷங்கரோ வெளியிட்டால் தெரியவரும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.