இதுவரை தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாகவும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசாத தமிழ் சினிமா ஜெய்பீம் படத்தில் இருளர் பழங்குடியினர் ஒருவரின் லாக் அப் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வழக்கறிஞர் சந்துருவாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். ஜெய்பீம் படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.
நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் விருத்தாச்சலத்தில் ராஜாகண்ணு என்பவரின் லாக்-அப் மரணம் பற்றிய கதை. அதோடு, இந்த படத்தில் வருகிற வழக்கறிஞர் சந்துரு நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ராஜாகண்ணு வழக்கில் வாதாடி நீதி பெற்று தந்திருக்கிறார்.
நீதியரசர் சந்துரு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல முக்கியமான வழக்குகளில் திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவருடைய பாதிப்பில் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்பீம் படத்தில், ஒரு பாடலில் அம்பேத்கர் குரலும் பதிவாகி உள்ளது. பழங்குடி இருளர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சாதி மற்றும் போலீஸ் அதிகாரத்தால் எப்படி நடத்தப்படுகிறார்கள். ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இன்றைக்கும் அதே நிலையில் உள்ளார்கள் என்று அவர்களின் வாழ்க்கை நிலையை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
இருளர் பழங்குடி சமூகத்தினர் பற்றி பொது சமூகத்தில் ஒரு பெரிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ள ஜெய்பீம் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவையும் பாராட்டி வருகின்றனர். இருளர் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக நடிகர் சூர்யா 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
ஜெய்பீம் படம் பலரால் பாராட்டப்பட்டாலும் வன்னியர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதற்கு காரணம், படத்தில், இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யும் போலீஸ் எஸ்.ஐ குருமூர்த்தி வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் இடம்பெற்றுள்ளது. ராஜாக்கண்ணு லாக் அப் மரணத்துக்கு காரணமான ஒரு கொடூரமான போலீஸ் வீட்டில் அக்னி கலசம் காட்டப்படுவதன் மூலம் அவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக சித்தரிக்கப்படுகிறார். இதற்கு வன்னியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதுமட்டுமில்லாமல், ராஜாகண்ணுவை நிஜத்தில் லாக் அப் மரணத்தில் அடித்து கொன்றவரின் பெயர் அந்தோணிசாமி அப்படி இருக்கும்போது அவருக்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ குரு வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த காரணங்களைக் குறிப்பிட்டு, ஜெய் பீம் படத்தில் எஸ்.ஐ.வீட்டில் இடம்பெற்றுள்ள அக்னி கலசத்தை மாற்ற வேண்டும் என்று வன்னியர் தரப்பில் வலியுறுத்தியதால் சர்ச்சையானது.
இதையடுத்து, வன்னியர்கள் தரப்பினரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட ஜெய்பீம் படத்தின் இயக்குனர் த.சே.ஞானவேலும், 2டி எண்டெர்டெய்ன்மென் நிறுவனமும் காலெண்டரில் இடம்பெற்றிருந்த அக்னி கலசத்தை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியுள்ளது. ஆனால், அதற்கு பதிலாக அந்த காலெண்டரில் லட்சுமி படம் இடம்பெற்றுள்ளது. இதனால், இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், உண்மையாக லாக் அப் மரணத்தில் இறந்த ராஜாக்கண்ணு இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அப்படி இருக்கும்போது, அவரை இருளாக சித்தரித்தது ஏன் என்று குறவர் சமூக அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.