வறுமையால் பாதிக்கப்பட்ட சினிமா நடிகர் ‘பல்லு பாபு’ சென்னையில் உள்ள சூலை பகுதியில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 35. சாலையோரத்தில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்த நடிகர் பல்லு பாபுவின் மரணத்தால் ஏற்பட்ட சோகம் தமிழ் சினிமா துறையினரை உலுக்கியுள்ளது.
தமிழ் சினிமா துறையில் ‘பல்லு பாபு’ என்று அறியபட்டவர் ஸ்ரீராமுலு. இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் விருச்சிககாந்த்தாக நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார். இந்த படத்தில் அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நபராக நடித்திருந்தார். மாபெரும் வெற்றிபெற்ற காதல் திரைப்படத்தில் நடித்த பிறகு, பல்லு பாபு ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். அதற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடிகர் பல்லு பாபுவின் மரணம் குறித்து போலீஸ் வட்டாரம் கூறுகையில், நடிகர் பல்லு பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அவர் ஒரு கோவிலுக்கு அருகில் பிச்சை எடுப்பதைக் கண்டதாகவும், ஒரு சில நண்பர்கள் கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு அவருக்கு உதவ முன்வந்ததாகவும் தெரிவித்தனர். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், வேலையில்லாமல் இருந்த நடிகர் பல்லு பாபு, சென்னை சூலை அங்காலம்மன் கோயில் தெருவில் நடைபாதையில் தங்கியிருந்தார். அதே நேரத்தில், அவருக்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில், பல்லு பாபு சூலை பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பல்லு பாபு ஆட்டோவில் இறந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், இதனை வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், பல்லு பாபுவின் உடல் அவருடைய தூரத்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கனவு உலகமான சினிமா துறையில் நடிகராக வேண்டும் இயக்குனராக வேண்டும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களில் பலர் மிகவும் போராடி வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் சிலர் மட்டும்தான். அந்த சிலரை மட்டும்தான் சினிமாவும் மாஸ் ஊடகங்களும் திரும்பத் திரும்ப காட்டுகிறது. ஆனால், வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்து வறுமையில் உழன்று, மனம் பிறழ்ந்து, பட்டினியில் இறந்துபோகும் பல பேர் வெளிச்சத்திற்கே வருவதில்லை. அப்படி, சினிமாவில் நடிக்க வந்து ஒரு மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்து கவனத்தைப் பெற்று வாய்ப்பு கிடைக்காமல், பசியும் பட்டினியுமாக, பிச்சை எடுத்து, மது பழக்கமும் தொற்றிக்கொள்ள தெருவோரத்தில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்த நடிகர் பல்லு பாபுவின் மரணம் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.