Kaatrin Mozhi Serial: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு ‘காற்றின் மொழி’ என்ற புதிய சீரியலை ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி.
Advertisment
இந்த சீரியலின் ஹீரோயின் கண்மணி வாய் பேச முடியாதவர். பெண் பிள்ளை வேறு. இதனால் கண்மணியின் அப்பாவும், பாட்டியும் அவளை வெறுக்கிறார்கள். இவர்களுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் தான் பிடிக்கும். எங்காவது போகும் போது, கண்மணி முகத்தில் முழித்து விட்டுச் சென்றால், போற காரியம் நடக்காது போன்ற, மூட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். பல விஷயங்களில் கண்மணியை, கொடுமைப்படுத்துகிறார்கள்.
கண்மணி அவளது அம்மா வயிற்றில் இருக்கும் போது, குழந்தையை கருவிலேயே அழித்திட முடிவு செய்து மருந்துகளை உட்கொண்டும் கண்மணி நல்ல படியாக பிறந்துவிடுகிறாள். மருந்து கொடுத்ததில் வேறு எந்த பிரச்னையும் ஏற்படாமல், அவளது பேச்சு மட்டும் பறிபோகிறது. ”புதுசா வேலை கேட்டு போகப்போறே என் பேரன் முகத்துல முழிச்சுட்டு போடான்னு” கண்மணியின் பாட்டி தன் மகனிடம் கூற, “எங்கே அவன்னு” தேடிக் கொண்டு வெளியில் வருகிறார் கண்மணியின் அப்பா. அப்பாவைப் பார்த்ததும் பயத்தில் பால் கேனை கீழே போட்டுவிட்டு நடுங்குகிறது குழந்தை.
பின்னர், வேலை கேட்டுப்போன இடத்தில் வேலை இல்லை என்று சொல்லிவிட, ”எல்லாம் அவ முகத்தில் முழுச்சது தான் காரணம்” என சொல்லிக்கொண்டே வருகிறார் கண்மணியின் அப்பா. அந்த கம்பெனி முதலாளியின் கார் வழியில் நின்று போக, அதை கண்மணியின் அப்பா சரி செய்கிறார். பின்னர் அந்த முதலாளியே தன் கம்பெனியில் வேலை கொடுக்கிறார். ”என் பையன் பிறந்த நேரம் தான் என்னை வாழ்க்கையில் உயர உயர கொண்டு போகுது” என சந்தோஷப்படுகிறார் கண்மணியின் அப்பா.
ஆண் பெண் பாகுபாடு களைந்து ஆரோக்கிய சமூகம் உருவாகி வரும் சூழலில், பார்வையாளர்களிடம் சிம்பத்தியை உருவாக்க இப்படியான கதைகள் தேவையா என யோசிக்கத் தூண்டுகிறது இந்த காற்றின் மொழி சீரியல்.