மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் படத்தின் அனைத்து உரிமைகளும் ஏவி.எம். பிலிம்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்திற்கே சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1963ம் ஆண்டு அமர்ஜோதி பட நிறுவனத்தின் சார்பில், நடிகர் ஜெமினி கணேசன், நடிகைகள் சாவித்ரி, கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் நடித்த கற்பகம் என்ற திரைப்படத்தை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திற்காக அமர்ஜோதி பட நிறுவன உரிமையாளர் சபரிநாதன், ஏவி.எம். நிறுவனத்திடம் 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்காக, இந்த படத்தின் உரிமையை ஏவி.எம். நிறுவனத்திற்கு 49 ஆண்டுகளுக்கு கொடுத்திருந்தார். இந்த உரிமைக் காலம் 2012ல் முடிந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு இந்த படத்தின் முழு உரிமையும், ஏவி.எம். நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், ஒப்பந்தப்படி, 2062ம் ஆண்டு வரை இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் ஏவி.எம். நிறுவனத்திற்கே சொந்தமானது எனவும், படத்தின் உரிமையில் தலையிட பட தயாரிப்பாளர் சபரிநாதன் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என ஏவி.எம். ஸ்டூடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், ஒப்பந்தப்படி, படத்தின் முழு உரிமையும் ஏவி.எம். நிறுவனத்திற்கே சொந்தமானது என அறிவித்து உத்தரவிட்டார்.