இன்று(நவ.7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், கமல் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர்.
அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் சாருஹாசன், மருமகள் சுஹாசினி மணிரத்னம், மகள்கள் சுருதி மற்றும் அக்ஷராஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன் - பூஜா குமார் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது கமல்ஹாசன் குடும்ப உறவினர்களுடன் பூஜா குமார் இருக்கும் புகைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது.
பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என்று பலரும் சமூக தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.