தனது வீட்டருகே சந்தேகத்திற்கு இடமான டிரக் ஒன்று 10 நாட்களாக நின்றுக் கொண்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகை குஷ்பூ. அவரின் இந்த புகாரை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது சென்னை போலீஸ்.
மயிலாப்பூரை அடுத்த சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ளது குஷ்பூவின் வீடு. அவரது வீடு உள்ள தெருவில் நம்பர் பிளேட் இல்லாத கண்டெய்னர் லாரி ஒன்று 10 நாட்களுக்கும் மேலாக நின்றிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த குஷ்பூ சென்னை போலீஸை டேக் செய்து தனது ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார்.
”இந்த டிரக் 10 நாட்களாக எங்கள் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது. நம்பர் பிளேட் இல்லாதது சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஆனால் இது குறித்து புகார் தெரிவிக்க எந்த குடிமகனும் முன்வரவில்லை. ஆகையால் சென்னை போலீஸ் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைப் பார்த்த சென்னை போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ட்ரக்கை பறிமுதல் செய்தனர். அதோடு சென்னை போக்குவரத்துக் காவல்துறையின், GCTP என்ற செயலியை வைத்துக் கொள்ளும்படியும், இதனால் குற்றம் தொடர்பான படங்கள் மூலம் உடனடியாக புகார் அளிக்க முடியும் எனவும் குஷ்பூவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.