தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களைக் கவர்ந்து, கடந்த மார்ச் மாதம் காலமான டாக்டர் சேதுராமன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பலரும் குட்டி சேது என்று செல்லமாக அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் சேது என்று அறியப்பட்ட நடிகரும் மருத்துவருமான டாக்டர் சேதுராமன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சில படங்களிலேயே அனைவரின் கவனத்தைப் பெற்றுவிட்டார். தோல்நோய் மருத்துவரான டாக்டர் சேதுராமன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து, இதற்குத்தானே கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, சேது, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் நடித்தார்.
டாக்டர் சேதுராமன் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2017-ம் ஆண்டு சேதுராமனுக்கு ஒரு விபத்தில் முதுகு தண்டுவடம் காயம் அடைந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இதனிடையே அவர், சினிமா மீது இருந்த ஆர்வத்தில் சினிமாவில் நடித்து வெற்றியும் பெற்றார். இந்த சூழலில், கடந்த மார்ச் 25ம் தேதி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாள், நடிகர் டாக்டர் சேதுராமனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருடைய மனைவி அப்போது கர்ப்பமாக இருந்தார். டாக்டர் சேதுராமனின் மரண செய்தியைக் கேட்டு அவருடைய நண்பர்களும் தமிழ் சினிமா துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு மருத்துவராக இருந்து சினிமா துறைக்குள் வந்து ஒரு நடிகராக அடையாளம் பெற்ற நேரத்தில் இப்படி திடீரென அவர் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், அவர் கர்ப்பமாக இறக்கும்போது கர்ப்பமாக இருந்த அவருடைய மனைவி உமாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், டாக்டர் சேதுராமனே மீண்டும் பிறந்து வந்துள்ளதாக நினைத்து பலரும் குழந்தையை செல்லமாக குட்டி சேது என்று அழைத்து சமூக ஊடங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"