நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் திட்டமிட்டப்படியே இன்று (நவம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் மாநாடு படம் நன்றாக இருப்பதாகவும், மிகப்பெரிய வெற்றியடையும் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்று மாலை, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீரென ‘மாநாடு’ திரைப்படத்தின் வெளியாகாது என கூறியது, சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், நேற்றிரவு படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் பல தடைகள், தாமதங்களுக்கு பிறகு தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், படத்தின் வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் வெளியாவதை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், தமிழக அரசு திரையரங்குகளுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்தது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திரையரங்குகளின் வருகையை வெகுவாக பாதிக்கும் என்று திரைத்துறையினர் கருத்து தெரிவித்தனர். இதனால், படங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற புதிய விதிமுறையால் திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வருகை பாதிக்கப்படும் அதனால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும். அதனால், முதலமைச்சர் இந்த விதிமுறையை பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஆனால், தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும், மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும் என திரைப்பிரபலங்களும், சிம்பு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்புக்கும், பைனான்ஸ் தரப்புக்கும் இடையே இருந்த சிக்கல் பேசி தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படம் வெளியாவது உறுதியானது.
அதனை உறுதி செய்யும் வகையில், இயக்குநர் வெங்கட்பிரபுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘கடவுள் இருக்கார்’ என பதிவிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.