பிரபல மலையாள நடிகர் விநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர், தமிழில் விஷால் நடித்த 'திமிரு' படத்தில், கால் நடக்க முடியாதவராக வில்லன் ரோலில் நடித்திருப்பார். சமீபத்தில் இவர் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதனால், சமூக தளங்களில் சாதி மற்றும் நிறம் தொடர்பான தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்நிலையில், இவர் மீது கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி, மீ டூ(Me Too) புகார் கூறியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விநாயகனை தொலைபேசியில் அழைத்த போது, ஆபாசமாக பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்துள்ளார். தன்னை மட்டுமல்லாது, தன் தாயையும் அவர் விரும்பும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதாக விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, விநாயகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், நடிகர் விநாயகன் மீது பிரிவு 509, 294(B), 120 (O) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
நடிகர் விநாயகன் சிறந்த நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். மலையாள சினிமாவில் நடனம் ஆடுபவராக தனது பணியை தொடங்கிய விநாயகன், 2016-ல் வெளியான 'கம்மட்டிபாடம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.