வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மேயாத மான்’. ரத்னகுமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பிரதீப் குமார் - சந்தோஷ் நாராயணன் இருவரும் இசையமைத்திருக்கின்றனர். விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கல்லூரியில் தன்னுடன் படித்த பிரியா பவானி சங்கர் மீது வைபவுக்கு ஒருதலைக் காதல். மூன்று வருடங்கள் ஒன்றாகப் படித்தும் கூட கடைசிவரை காதலைச் சொல்லாததால், அவரை நண்பர்கள் ‘இதயம் முரளி’ என்றுதான் கிண்டல் செய்கின்றனர். பிரியா பவானி சங்கருக்கு நிச்சயமாகிவிட, விஷயம் தெரிந்த வைபவ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களிடம் கூறுகிறார்.
வைபவைக் காப்பாற்றுவதற்காக, பிரியாவிடம் அவர் ஒருதலையாகக் காதலிக்கும் விஷயத்தைச் சொல்லி, கேவலமாக பிரியா திட்டினால் திருந்திவிடுவான் என்கிறார்கள் நண்பர்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் எழுதிக் கொடுத்த டயலாக் பேப்பரைப் படித்து வைபவைத் திட்டுகிறார் பிரியா. இதனால், வைபவுக்கு பிரியா மீது கோபம் ஏற்படுகிறது.
இருந்தாலும், போதையில் பிரியாவைப் பற்றி சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விவரிப்பதைக் கேட்கும் பிரியா, தன்னுடைய திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப் போடுகிறார். இதற்கிடையில், வைபவின் தங்கை இந்துஜாவுக்கு, வைபவ் நண்பன் விவேக் பிரசன்னா மீது காதல். அந்த ஒருதலைக் காதல், இருதலைக் காதலாகிறது.
பிரியா வைபவைத் திட்டிய விஷயம், நண்பர்களால் நிகழ்த்தப்பட்டது என்று வைபவுக்குத் தெரிய வருகிறது. இதனால், பிரியா மீது இருக்கும் கோபம் நீங்கி, மறுபடியும் காதல் பிறக்கிறது. சூழ்நிலைகளும் வைபவ் மீது பிரியாவுக்கு காதலை ஏற்படுத்த, ஒரு முக்கியமான விஷயம் அவர்களைப் பிரிக்கிறது. அவர்கள் மறுபடியும் இணைந்தார்களா என்பதுதான் கதை.
படிக்கும்போதே உங்களுக்கு தலை சுற்றுகிறதா? படம் பார்க்கும்போது எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. ஏற்கெனவே ‘மது’ என்ற பெயரில் குறும்படமாக இது வெளியாகியிருக்கிறது. ஒரு சிறுகதையை நாவலாக மாற்றும்போது என்னென்ன குளறுபடிகள் நடக்குமோ, அது எல்லாமே இதிலும் நடந்திருக்கிறது. கதையை எப்படி கொண்டு செல்வது எனத் தெரியாமல், இழுவோ இழுவென்று இழுத்திருக்கிறார்கள்.
வைபவ், எந்த நேரமும் குடித்தது போல் இருக்கிறார், பேசுகிறார், நடந்து கொள்கிறார். கேரக்டருக்கும், அவருக்கும் ஒட்டவில்லை. பிரியா பவானி சங்கருக்கு இது அறிமுகப்படம். கொடுத்த கேரக்டரைச் செய்திருக்கிறாரே தவிர, பெரிதாக ஒன்றுமில்லை. மிக முக்கியமான விஷயம், நேரில் அவ்வளவு அழகாக இருக்கும் பிரியாவை, திரையில் ஏனோதானோவென்று காண்பித்திருக்கிறார்கள். சில காட்சிகளைத் தவிர பெரும்பாலான காட்சிகளில் டல்லாகவே இருக்கிறார்.
வைபவின் நண்பனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா தான் ஒட்டுமொத்த பாராட்டையும் பெறுகிறார். ‘விக்ரம் வேதா’வில் நன்றாக நடித்திருந்தாலும், முழுப்படமும் வந்து ஆச்சர்யப்படுத்துகிறார். அதுவும் தன் காதலை அவர் இந்துஜாவிடம் தெரிவிக்கும் காட்சி, அருமை. வைபவின் தங்கையாக நடித்திருக்கும் இந்துஜாவுக்கும் அழகான நடிப்பு. போல்டான பெண்ணாக அசத்துகிறார்.
பாடல்கள் ரசிக்க வைக்கும் அளவுக்குப் பின்னணி இசை ரசிக்க வைக்கவில்லை. சில இடங்களில் ரொம்பவே ரசிக்க வைக்கிறது ஒளிப்பதிவு. சரியான கதையைத் திட்டமிட்டு படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
‘அப்படியே வாயை வச்சா ஜலத்தைக் குடிப்பீங்க?’ என்ற கேள்விக்கு, ‘ஆமா... நீங்க எதை வச்சி குடிப்பீங்க?’, நண்பனின் திருமண வரவேற்பில் ‘கோலங்கள்’, ‘மெட்டி ஒலி’ சீரியல் பாடல் என ரசிக்க வைக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் படம் முழுக்க இருக்கின்றன. ஆனால், அது மட்டுமே இரண்டே முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்க அது மட்டும் போதாதே...
ஒரு மணி நேரத்தில் கூட ஒரு படத்தை முடித்துவிடலாம். இப்போது வெளியாகும் பல தமிழ்ப் படங்கள், இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிடுகின்றன. இது எல்லாமே தெரிந்த கார்த்திக் சுப்பராஜ், இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு வளவளவென்று படத்தை இழுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் சம்பந்தமில்லாமல் அடுத்தடுத்து வரும் காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தப் படத்தை எடுக்காமல் குறும்படமாகவே விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மொத்தத்தில், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்திருக்கிறது ‘மேயாத மான்’.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.