திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் சினிமாவில் நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.
குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடித்து வந்தவர் நஸ்ரியா. ஹீரோயினாக மலையாளப் படங்களில் நடித்தவர், அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவருடைய சுட்டித்தனமான குறும்புகள், தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதிலும் ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு நஸ்ரியாவை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது.
‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்கா’ ஆகிய 5 தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் நஸ்ரியா. ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் நடித்த கையோடு அவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் ஆகிவிட்டது.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஃபஹத் ஃபாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இது, பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம். திருமணத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் நஸ்ரியா. இதனால், அவருடைய ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்தனர்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் நஸ்ரியா. மலையாள இயக்குநரான அஞ்சலி மேனன், இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’தான், நஸ்ரியா கடைசியாக நடித்த மலையாளப் படம்.
அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில், நஸ்ரியாவுடன் பிருத்விராஜ் மற்றும் பார்வதி நாயர் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதுதவிர, துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளப் படத்திலும் நஸ்ரியா நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.