Neeya Naana Gobinath: விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினால் சினிமாவுக்குள் எளிதாக நுழைந்து விடலாம் என்ற கருத்து பார்வையாளர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அங்கு தொகுப்பாளர்களாக பணியாற்றிய சிவகார்த்திகேயன், மாகாபா, ரம்யா, டிடி, ஜாக்குலின், ரக்சன் என பெரும்பாலானவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன்.
Advertisment
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் இருந்து இன்னொருவர் ஹீரோவாக களம் காணவிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ‘நீயா நானா’ கோபிநாத் தான். இவர், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006 முதல் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆங்கிலம் கலக்காமல், தமிழை சரளமாக தெளிவான உச்சரிப்புடன் பேசுவதுதான் கோபியின் ப்ளஸ் பாயிண்ட்.
முதன்முதலில் 2009-ம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ’வாமனன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோபி. அதைத் தொடர்ந்து, ’தோனி’, ’நிமிர்ந்து நில்’ போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு, ’இது எல்லாத்துக்கும் மேல’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ’கண்ணுபட போகுதய்யா’ என்ற படத்தை இயக்கியவர்.
சமூக அக்கரை மிகுந்த படமாக உருவாகும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.