கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ’நேற்று இன்று நாளை’.
இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ரவிக்குமார் அறிமுகமானார். ’நேற்று இன்று நாளை’ படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா நடித்திருந்தார். இதனை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்டும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன. சயின்ஸ் ஃபிக்ஷன் கதையில் அமைந்திருந்த இந்தப் படம், பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியடைந்தது.
இந்நிலையில் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் பாகத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 14’ படத்தில் பிஸியாக இருப்பதால், நேற்று இன்று நாளை படத்தில் அசோசியேட்டாக பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இதனை இயக்குகிறார்.
இரண்டாம் பாகத்தில் நடிக்க, விஷ்ணு மற்றும் கருணாகரன் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் குறித்தத் தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசை ஜிப்ரான்.