சர்ச்சைகள், விமர்சனங்கள், பாராட்டுகள் என அனைத்தையும் உளவாங்கிக் கொண்டு வெற்றிகரமாக ஐம்பது நாளைக் கடந்துள்ளது தமிழ் பிக்பாஸ் ஷோ. முதலில் 15 போட்டியாளர்கள் உள்ளே வந்தார்கள். ஆனால், பலரின் எலிமினேஷனுக்குப் பிறகு இப்போது வெறும் 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டினுள் உள்ளார்கள்.
இடையில் வந்து சொருகியவர் பிந்து மாதவி. இவர் விருப்பப்பட்டு வந்தாரா அல்லது விருப்பமில்லாமல் வேறு காரணங்களுக்காக வந்தாரா என்பது இன்னமும் ரசிகர்களுக்கு புரியவில்லை. அதிகம் ஈடுபாடு இல்லாமலும், கொஞ்சம் ஈடுபாட்டோடும் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
பிந்துவால், பிக்பாஸ் ஷோவில் இதுவரை எந்தவொரு சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறவில்லை. இப்போதுதான் 'பேய் டாஸ்க்' என்று ஒன்றை வைத்து, பிந்து மூலம் ஷோவை சுவாரஸ்யமாக்க முயற்சிக்கிறார் பிக்பாஸ். ஆனாலும், 'முடியுமா... எங்க கிட்டயேவா...' என்கிற மோடில் தான் பிந்து சுற்றிக் கொண்டிருக்கிறார். சினேகன் மூச்சப் போட்டு நடித்தாலும், பேய் சமாச்சாரங்களுக்கெல்லாம் பிந்து அஞ்சுவதாக தெரியவில்லை.
ஆனாலும், நாம் சினேகனை பாராட்டியே ஆக வேண்டும். மனுஷன்' 'பேய்' டாஸ்குக்காக என்னமா உழைக்கிறார். காயத்ரி, ரைசாவைப் பார்த்து சொன்ன 'அஞ்சு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா...500 ரூபாய்க்கு நடிக்குறா' என்ற வரிகள், 'அண்ணன்' சினேகனுக்கே பொருந்தும். இப்போ சொல்கிறேன்.. இந்த வீட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் எலிமினேட் ஆகலாம். ஆனால், சினேகனை மட்டும் மக்கள் எலிமினேட் செய்தால் கூட, பிக்பாஸ் எலிமினேட் செய்து விட மாட்டார். இப்போது இருப்பது போல், பிக்பாஸின் 'விசுவாசமான ஊழியன்'-ஆக இருக்கும் வரை சினேகனுக்கு நோ எலிமினேஷன்.
சரி விஷயத்திற்கு வருவோம். பிந்து மாதவியைத் தொடர்ந்து, மற்றொரு பெண் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று அடியெடுத்து வைக்கிறார். அது வலது காலா அல்லது இடது காலா என்பது இனிமேல் தெரிந்துவிடும். இதற்கான புரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பெண் போட்டியாளர் நடிகை சுஜா என்று கூறப்படுகிறது. 'என்னம்மா முனியம்மா உன் கண்ணுல மை...' என்ற ரீமேக் பாடலுக்கு குத்தாட்டம் போட்டாரே... அதே சுஜா தான். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அந்த புரமோவில் இருப்பது இவர் தான் என்று நம்மால் உறுதி செய்யப்படுகிறது.
பிக்பாஸில் வீட்டிற்குள் இவர் புதிதாக வந்தது ஒன்றும் நமக்கு ஆச்சர்யம் இல்லை. அதை கடந்த வாரம் கமல்ஹாசனே, 'இன்னும் புதிய போட்டியாளர்கள் ஷோவிற்கு வரப் போகிறார்கள்' என கூறிவிட்டார்.
ஆனால், நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது விஷயம் ஒன்று அந்த புரமோவில் காட்டப்பட்டது. கலைநிகழ்ச்சிகளில் கிரேன் மூலம் ரோப்பில் கட்டப்பட்டு பிரபலங்கள் பறந்து கொண்டே மேடைக்கு வருவது போன்று, சுஜாவும் ஒரு பெரிய ரோப்பில் கட்டப்பட்டு வீட்டிற்குள் மேலிருந்து பறந்து வருகிறார். ஆனால், இது எதுவுமே தெரியாத பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆச்சர்யமாக வந்து வெளியே பார்க்கிறார்கள்.
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா பிக்பாஸ்? நீங்கதான் எடிட்டிங்கில் கில்லியாச்சே.. எப்படி இப்படி ஒரு மொக்கையா புரமோ எடிட் பண்ணுனீங்க!!?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.