Advertisment

நிபுணன் திரை விமர்சனம்: அர்ஜுனின் 150-வது படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தாது!!

யாராக இருந்தாலும் சரி, ஏதேனும் பிரச்னையில் அவர்கள் சிக்கினால் அவர்களை காக்கும் காவலனாகவே நாயகன் ரஞ்சித் காளிதாஸ் இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிபுணன் திரை விமர்சனம்: அர்ஜுனின் 150-வது படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தாது!!

ஆஷாமீரா அய்யப்பன்

Advertisment

நிபுணன் நடிகர் குழு: அர்ஜுன், வரலக்ஷ்மி சரத்குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன்

திரைப்பட இயக்குனர்: அருண் வைத்தியநாதன்

நிபுணன் மதிப்பீடு: 2.5

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருக்கும் திரைப்படம் 'நிபுணன்'. இது அர்ஜுனுக்கு 150-வது திரைப்படம். 'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். 'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தொடர்ந்து தமிழில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'நிபுணன்' படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

"நிபுணன்" என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது. தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் சாதனை படைக்கும் காவல்துறை அதிகாரியின் கதை தான் நிபுணன்.

முதல் 15- 20 நிமிடங்கள் நிபுணன் எந்த மாதிரியான திரைப்படம் என்பதை தெளிவாக்கிவிடுகிறது. படத்தின் நாயகன் டி.எஸ்.பி., ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜுன்) அறிமுக காட்சி வழக்கமான சினிமாதனம். தன்னுடன் பணிபுரியும் ஜோசப் (பிரசன்னா), வந்தனா (வரலக்ஷ்மி சரத்குமார்)-வுக்கு மட்டுமல்ல, யார் பிரச்னையில் சிக்கினாலும், காக்கும் காவலனாகவே அர்ஜூன் அவதாரம் எடுக்கிறார்.

நாயகன் அர்ஜூன் அறிமுகக் காட்சியில், காவல்துறை கண்காணிப்பாளர், மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகிறார். சிக்கலான வழக்கை கண்டுபிடிக்க மிகச் சிறந்த ஒருவர் தேவை என மூத்த அதிகாரி கேட்பார். உடனே, காவல்துறை கண்காணிப்பாளர், நாயகன் அர்ஜூனை அழைப்பார். அந்த சமயத்தில், பாதி வேலையில் இருக்கும் அவர், செல்போனை எடுத்து, "ஆயுதங்களுடன் இருக்கும் நான்கு பேரை முடித்துக் கட்டும் வேலையில் இருக்கிறேன்" என்பார். அவ்வளவு தான், அழைப்பு துண்டிக்கப்படும். ’இன்னும் ஐந்து நிமிடங்களில் அவருடன் நீங்கள் பேசலாம்’ என மூத்த அதிகாரியிடம் காவல் கண்காணிப்பாளர் சொல்வார்.

அர்ஜூன் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது போன்ற காட்சிகள், திரைக்கதையின் சஸ்பென்சை குறைக்கிறது. போலீஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், பாசமிகு கணவன், தந்தை, நட்புமிகு தோழனாக, ஏன் நல்ல சமையல்காரனாகவும் (பாடல் ஒன்றில் சமைக்கிறார்) அவர் இருக்கிறார். அடுத்தடுத்து படத்தின் காட்சிகள் நகரும் போது, பல புதிர்கள் வருகின்றன. மிகுந்த சிரத்தையாக இருந்தால் கூட அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அர்ஜூன் கண்டுபிடித்து விடுகிறார். எனவே, அர்ஜூன் இருக்கும் போது எப்படி தவறு நடக்கும்? எப்படியும் அர்ஜூன் செய்து முடித்து விடுவார் என்ற எண்ணம் தோன்றுகிறது. இது படத்தின் வேகத்துக்கு தடையாக இருக்கிறது.

துப்பு கிடைக்காத மூன்று கொடூரக் கொலைகள்; முகமூடி அணிந்த சடலங்கள் - ஒரு கொலையாளி. அக் கொலையாளியை தனது அறிவாற்றலால், நிபுணத்துவத்தால் கண்டறிவது தான் கதை.

துல்லியமான, அதிரடியான, சுறுசுறுப்பான காவல் அதிகாரியாக தனது 150-வது படத்திலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருப்பது அவருக்கு பொருத்தமாக உள்ளது. இதுவரை பல்வேறு ஆக்ஷன் படங்களிலும், காவல் அதிகாரி காதாப்பாதிரத்திலும் நடித்திருப்பதால், அர்ஜூனுக்கு சரியாகவே பொருந்துகிறது.

அர்ஜூன் மற்றும் ஷில்பா (ஸ்ருதி ஹரிஹரன்) இடையேயான ரொமான்ஸ் காட்சிகள், படத்தின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. படத்தின் இறுதி காட்சிகள் எப்போதும் போல், கசப்பும், இனிப்பும் கலந்து நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவே இருக்கிறது.

மொத்தத்தில் "நிபுணன் ஒரு நடுத்தர மாணவன்". நல்லதோ, கெட்டதோ உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தாது!!

Arjun Sarja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment