‘திட்டமிட்டபடி ‘பத்மாவதி’ படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும்’ என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியே இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
‘பத்மாவதி’ படம் ரிலீஸான நாளில் இருந்தே, இந்தப் படத்துக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, ஸ்ரீராஜ்புத் கர்ன சேனா என்ற அமைப்பு படம் ரிலீஸாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்காக, தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலைகளுக்கு 5 கோடி வரை விலை நிர்ணயித்துள்ளது. இதனால், இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்சாருக்கு விண்ணப்பித்தபோது, அதில் விவரங்கள் சரியாக நிரப்பப்படவில்லை என்று கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது சென்சார் போர்டு. இதனால், டிசம்பர் 1ஆம் தேதி படம் ரிலீஸாவது சந்தேகம் தான் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆனால், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும் என வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஓஓவான அஜித் அந்தாரே தெரிவித்துள்ளார். “படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்பது பொய்யான செய்தி. தீபிகா படுகோனேவுக்கும், சஞ்சய் லீலா பன்சாலிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ள அரசுக்கு நன்றி” என ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.