விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும் நடிகை நேஹா மேனனின் தாய்க்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நேஹா தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டாடி வருகிறார். இந்த செய்தி மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், உண்மையில் இது மிகப்பெரிய விஷயம். இந்த சந்தோஷத்தை கொண்டாட தைரியம் வேண்டும்… இதன் மூலம், போலித்தனம் இல்லாதவர் நேஹா என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.
பொதுவாக 60களின் இறுதி வரை குடும்பக் கட்டுப்பாடு பிரபலமாகாத காலத்தில், அண்ணன்கள் அக்காக்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பெற்றுக்கொண்ட நேரத்திலும், அவர்களின் தாய் கர்ப்பமடைந்து குழந்தை பிரசவித்தது உண்டு. அண்ணன்கள், அக்காக்களின் குழந்தைகள் வயதே அவர்களுடைய கடைசி தம்பி தங்கைகளின் வயதும் அப்போது இருக்கும். இதனை குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாகவே கொண்டாடி வந்தனர். வளர்ந்த அண்ணன்கள், அக்காக்கள் தங்களுக்கு தம்பி, தங்கச்சி பாப்பா பிறந்ததைக் கொண்டாடுவதற்கு தயங்கியதும் இல்லை. அதற்காக வெட்கப்பட்டதும் இல்லை. மறைத்ததும் இல்லை. ஆனால், நவீன யுகத்தில், நாகரிகம் என்ற பெயரில் போலியாக, ஓரிரு குழந்தைகளுக்கு பிறகு, தாய்மார்கள் தாமதமாக மீண்டும் கர்ப்பமடையும்போது பலரும் அதிலும் வளர்ந்த அண்ணன்கள் அக்காக்கள் அதை ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும் வெளியே சொல்வதற்கு வெட்கப்பட வேண்டிய விஷயம் அவமானம் என்று கருதுகின்றனர். இந்த மனநிலை மிகவும் மோசமான மனநிலை. எந்த வயதில் தாய்மை அடைந்தாலும் அதை கொண்டாடுவதும் அவரை பாதுகாப்பதும் முக்கியமானது.
அந்தவகையில், இந்தக் காலத்தில் தனது தாய் மீண்டும் தாமதமாக கர்ப்பமடைந்து குழந்தை பிரசவித்தால் அதை வெளியே கூறி சந்தோஷமாக கொண்டாடி முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நேஹா தனது தாய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதைக் கூறி சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்.
நடிகை நேஹா, சன் டிவியில் நிலா என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சித்தி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை நேஹாவுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது.
2002ம் ஆண்டில் பிறந்த நடிகை நேஹாவுக்கு தற்போது 19 வயதாகிறது. இவர் சமீபத்தில், வெளியிட்ட வீடியோவில், தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருப்பதை சந்தோஷத்துடன் கூறிய நேஹா, மருத்துவமனையில் அம்மாவும் தங்கையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், நடிகை நேஹா, தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்கக் காத்துக் கொண்டிருப்பதாகவும் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்த நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில், நேஹா தான் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார். தனது தாய் கர்ப்பமடைந்து அவருக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருப்பதை பொது வெளியில் சந்தோஷமாக தெரிவித்து கொண்டாடி வருகிறார். நடிகை நேஹா, உண்மையில், இந்த சந்தோஷத்தை கொண்டாட தைரியம் வேண்டும்… இதன் மூலம் தான் போலித்தனம் இல்லாத பெண் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நிஜமாகவே அனைவரும் நேஹாவுக்கு ஒரு பெரிய வாழ்த்து கூறுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.