பார்த்திபன் இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே’ இரண்டாம் பாகத்தில், கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.
பார்த்திபன் இயக்கி, நடித்த படம் ‘உள்ளே வெளியே’. 1993ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம், க்ரைம் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. ஐஸ்வர்யா, தளபதி தினேஷ், வெண்ணிறாடை மூர்த்தி, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பார்த்திபனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சீதா இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தைத் தொடர்ந்து, ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பார்த்திபன். தான் இயக்கும் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்கும் பார்த்திபன், இந்தப் படத்தில் சமுத்திரக்கனியை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார். ‘ஆடுகளம்’ கிஷோர், ரோபோ சங்கர், மம்தா மோகன்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் ‘உள்ளே வெளியே 2’வில் நடிக்க உள்ளனர்.
மேலும், பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில், முக்கிய கேரக்டரில் தற்போது நடித்து வருகிறார் பார்த்திபன்.