விஜய் டிவி சீரியல் நடிகை பிரவீணா புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் வெளியிட்ட வழக்கில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா- ராணி சீரியலில், சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரவீணா. இவர் தமிழ், மலையாளம் என பல சீரியல்களில் நடித்துள்ளார். நிறைய படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரவீனா தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, வலைத்தளத்தில் வெளியிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, தனிப்படை அமைத்து சம்பந்தபட்ட நபர்களை தேடி வந்தனர். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய டெல்லி நாக்பூரைச் சேர்ந்த பாக்யராஜ் (22) என்ற கல்லூரி மாணவனையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமின் உத்தரவின் பேரில் நகர போலீஸ் கமிஷனர் பல்ராம் உபாத்யாய் தலைமையிலான விசாரணையைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரை கைது செய்த குழுவில் சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் டி.ஷியாம்லால், இன்ஸ்பெக்டர் எஸ்.பி.பிரகாஷ், எஸ்.ஐ.ஆர்.ஆர்.மனு, போலீஸ் அதிகாரிகள் வி.எஸ்.வினீஸ், ஏ.எஸ்.சமீர்கான், எஸ்.மினி ஆகியோர் இருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் வைக்கப்பட்டார்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக பிரவீனா பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil