அருந்ததி உள்ளிட்ட படங்களை எடுத்த புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார்.
இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன்
டோலிவுட் திரையுலகில் பல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கோடி ராமகிருஷ்ணன். இவர் தெலுங்கில் சுமார் 100 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் வெற்றியை ஈட்டி பல கோடிகளை வசூலித்தது.
அருந்ததி படம்
அப்படிப்பட்ட ஒரு படம் தான் அருந்ததி. அனுஷ்கா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே மற்றும் மனோரமா ஆச்சி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் இந்த படம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வசூலை அள்ளிக் குவித்தது.
இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் காலமானார்
அருந்ததி படத்திற்கு பிறகு தான் அனுஷ்காவிற்கு டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் உலகில் மவுசு அதிகரித்தது என்றுக் கூட சொல்லலாம். அத்தகைய அழகையும் பிரம்மாண்டத்தையும் அளித்தவர் தான் கோடி ராமகிருஷ்ணன்.
இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் சீரில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்தபோது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அது தீவிரமடைந்துள்ளதாகவும் தெரியவந்தது. இவருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து கூட சிறந்த டாக்டர்கள் ஐதராபாத்திற்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தொற்று தீவிரமடைந்த காரணத்தினால், அவரின் உடல் சிகிச்சையை ஏற்க மறுத்தது. இன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து தெலுங்கு திரையுலகமே, துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இவரின் மறைவை துக்கம் அனுசரித்து வருகிறார்கள்.