ரஜினிகாந்த் மற்றும் விஜய்காந்த் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் மகேஷ் ஆனந்த் பரிதாப நிலையில் மரணம். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது போலீஸ்.
பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நடிகர் மகேஷ் ஆனந்த் மரணம்
80 - 90 காலகட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் விஜயகாந்துடன் பெரிய மருது, ரஜினிகாந்துடன் வீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2000 ஆண்டு திருமணமான இவர் 2 வருடங்களுக்கு பின்னர் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார்.
படங்கள் வாய்ப்பும் இல்லாமல் இருந்த இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். 57 வயதான மகேஷ் வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்பதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. ஆனால் அவரது வீட்டிலிருந்து அதுதொடர்பான கடிதம் எதுவும் கைப்பற்றபடவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, அது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், தர்மேந்திரா, கோவிந்தா, சஞ்சய் தத் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தவர் மகேஷ் ஆனந்த்.
கூலி நம்பர் 1, குருஷேத்ரா, ஸ்வர்க் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்தாவின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான "ரங்கீலா ராஜ்" திரைப்படத்தில் மகேஷ் ஆனந்த் கடைசியாக நடித்திருந்தார்.