ரஜினிகாந்த் தனது ரசிகர்களை வரும் 15ம் தேதி சந்திக்க உள்ளார். முன்னதாக, இந்த சந்திப்பு ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரசிகர்களையும் ஒன்றாக பார்த்து ஃபோட்டோ எடுத்து, விருந்து கொடுக்க திட்டமிட்டார். ஆனால், அப்படி அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து ஃபோட்டோ எடுப்பது சாத்தியமில்லை என்றும், அதற்கு பதில், மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரஜினியே நேரடியாக பேட்டியளித்தார்.
இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதி அன்று திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் என்று 17 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களை, காலை 7 மணிக்கே ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்துவிட வேண்டும் என கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். காலை 9 மணிக்கு வரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்போது 'பரிசுப் பொருட்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம்' என்று ரசிகர்களிடன் ரஜினி அறிவுறுத்தியுள்ளாராம். முக்கியமாக, காலில் விழவே கூடாது என்பதுதான் ரஜினியின் அன்புக் கட்டளையாம்.