நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்பது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என்று ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலால், மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக, சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகிவரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டடது. அந்த வகையில், படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
அதே நேரத்தில், ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது கேள்விக்குறியானது.
அண்மையில், ரஜினியின் வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக, கொரோனா தொற்று பரவல் காலத்தில் தற்போது அவர் அரசியல் களம் இறங்கக் கூடாது என அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ரஜினி எழுதியதாக சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் உலவியது.
இந்த கடிதம் குறித்து விளக்கம் அளித்த ரஜினி அந்த கடிதம் தான் வெளியிட்டது அல்ல என்றும் ஆனால், அதில் தனது உடல்நிலை குறித்து குறிப்பிட்டுள்ள விஷயஙக்ள் உண்மை என்றும் தெரிவித்தார். அதோடு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று ரஜினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கல் வெளியானது. இதுகுறித்து, ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ், இன்று (நவம்பர் 22) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளிக்கையில், “இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரஜினிக்கு காய்ச்சல் எதுவும் இல்லை. அவர் நல்ல ஆரோக்கியமாக உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”