“ரஜினியால் மட்டுமே அந்த கேரக்டரில் நடிக்க முடியும். வேறு யார் நடித்தாலும் அவ்வளவு பொருத்தமாக இருக்காது” என பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். வில்லனாக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘2.0’ உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தின் பெயரை விட்டுக்கொடுக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், ‘2.0’ என படத்திற்குப் பெயர் வைத்துள்ளனர்.
‘2.0’ படத்திற்கான கதையை முதன்முதலில் ரஜினியிடம் ஷங்கர் சொன்னபோது, ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. ‘இவ்வளவு பெரிய கேரக்டரைத் தன்னால் தாங்க முடியாது’ என்று நினைத்த ரஜினி, பாலிவுட் நடிகரான ஆமீர் கானைத் தன்னுடைய கேரக்டரில் நடிக்க வைக்குமாறு ஷங்கரிடம் சொல்லியிருக்கிறார். அத்துடன், ஆமிர் கானுக்கே நேரடியாக போனைப் போட்டு, ‘இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
ரஜினி சொன்னபின் ஆமிர் கானால் மறுக்க முடியுமா என்ன? ஷங்கரிடம் அவர் கதை கேட்டிருக்கிறார். கேட்டு முடித்ததும், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என கூறியிருக்கிறார். ‘இந்த கேரக்டர் ரஜினிக்கு மட்டுமே செட் ஆகும். அவரால் மட்டுமே இந்த கேரக்டரில் நடிக்க முடியும். அவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் பொருத்தமாக இருக்காது’ என்று சொன்ன ஆமிர் கான், ‘உங்களால் முடியும்’ என்று ரஜினிக்கு நம்பிக்கை தந்திருக்கிறார். அந்த நம்பிக்கையால் ‘2.0’ படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி.