கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியதால்தான் நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனை நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: ’அரசியலுக்கு நான் வருவேன் என்று முடிவெடுத்தபோது கொரோனா வந்துவிட்டது. இமினோ டிப்ரசண்ட் மாத்திரைகளை நான் சாப்பிட்டு கொண்டிருந்தேன். கட்சி தொடங்குவது குறித்து நான் தலையிட விரும்பவில்லை என்று எனது மருத்துவர் கூறினார். ஆனால் பொது நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. அப்படியே கலந்துகொள்ள வேண்டும் என்றால் 10 அடி இடைவேளையில் நின்று நீங்கள் கலந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். செல்லும் இடங்களுக்கு கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறினார். 10 அடி இடைவேளைவிட்டு அரசியல் கூட்டம் நடத்த முடியாது. இதுபோல இந்த காரணங்களை வெளியில் சொல்ல பயந்தேன் . இதை மருத்துவரிடம் கூறியபோது, நானே வந்து விளக்கம் அளிக்கிறேன்.
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நானே விளக்கம் கொடுக்கிறேன் என்று மருத்துவர் சொன்னார். ஆனால் அது வேண்டாம் என்று முடிவெடுத்து நானே அறிவித்துவிட்டேன். நிறைய குடித்தால் குடல் பாதிக்கும். தொடர்ந்து புகைப்பழக்கம் இருந்தால், நுரையீரல் மட்டும்தான் பாதிக்கும். ஆனால் உப்பு அதிகமாக சாப்பிட்டால் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். ஒரு திருமணத்திற்கு சென்ற என் மனைவி நல்ல உணவு சமைத்தார்கள் என்று கூறி அந்த நபரை எங்கள் வீட்டிலும் சமைக்க சொன்னார். உணவு நன்றாகத்தான் இருந்தது, ஆனால் ரத்த கொதிப்பு இருவருக்கும் குறைவே இல்லை. ஒரு நண்பர் எங்கள் வீட்டில் சாபிட்டபோது, இவ்வளவு உப்பு, எண்ணெய் சேர்த்தா சாப்பிடுறீங்க என்று கேட்டார். அதைத் தொடர்ந்து உணவு பழக்கத்தை மாற்றிவிட்டேன்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“