Sun TV's Azhagu Serial: சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’அழகு’ மெகா தொடரில் இருந்து நடிகை சஹானா ஷெட்டி விலகியுள்ளார்.
Advertisment
மெகா சீரியல்களுக்குப் பெயர் போன சன் டி.வி-யில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது அழகு மெகா தொடர். இதில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதில் ரேவதி - தலைவாசல் விஜய்க்கு மகளாக காவ்யா என்ற கதாபாத்திரத்தில், சீரியலின் ஆரம்பத்திலிருந்தே நடித்து வந்தவர் தான் சஹானா ஷெட்டி. இவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகியது சக கலைஞர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் தான் ஏன் அழகு சீரியலை விட்டு விலகினேன் என்பதற்காக மர்ம முடிச்சை அவிழ்த்திருக்கிறார் சஹானா.
”நான் எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தினாலும், அழகு சீரியலை விட்டு வெளியேறவில்லை. சின்னத்திரையில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அதிலிருந்து விலகினேன். எனக்கும் இந்த சீரியலுக்கும் மிகப்பெரிய உறவு உள்ளது. தற்போது அழகு சீரியலை டிவி-யில் பார்க்கும் போது, மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்று அவர்களையெல்லாம் சந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. நிச்சயம் அவர்களுடன் மீண்டும் இணைவேன். அழகு சீரியலில் கிடைத்த கதாபாத்திரத்தை விட இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன்” என தான் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார் சஹானா.
தவிர, இவர் இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் கரகாட்டகார பெண்ணாகவும் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’சுந்தரி நீயும், சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் சஹானா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது!