பிகினி எனும் நீச்சல் உடை அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமந்தா தக்க பதிலடி அளித்துள்ளார்.
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாகார்ஜூனின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தமிழில் அவர் நடித்த மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி கண்டது.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக உள்ள நடிகை சமந்தா, மாலத்தீவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து ஓய்வெடுத்து வருகிறார். அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தை தன் இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்தார்.
இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும், ’நாகர்ஜூன் மருமகள் இவ்வாறு நீச்சல் உடை அணிவதா?”, “பாலிவுட் நடிகைகள் கூட திருமணத்திற்கு பிறகு நீச்சல் உடை அணியமாட்டார்கள்”, என, அவருக்கு என்ன உடை அணிய வேண்டும் என வகுப்பெடுத்தனர்.
அவர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சமந்தார். அதில், “என்னுடைய விதிமுறைகளை நான் வகுத்துக் கொள்கிறேன். உங்களுடைய விதிகளை நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்”, என குறிப்பிட்டுள்ளார். மேலும், ”மற்றவர்களால் எதை உறுதியாக செய்ய முடியாதோ, அதை உறுதியுடன் செய்பவளே வலுவான பெண்”, எனவும் குறிப்பிட்டுள்ளார்.