ஆர்யா இருந்தாலே அந்த இடம் கலகலவென இருக்கும். எதற்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாகப் பேசுவார் ஆர்யா. அப்படித்தான் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேச, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.
கொடுக்கல் - வாங்கல் தகராறில் சில நாட்களுக்கு முன்பு சந்தானத்துக்கும், சண்முகசுந்தரத்துக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருதரப்புக்குமே காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் சந்தானம்.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தச் சம்பவம் நடைபெற்றதால், ஆர்யா பேசும்போது அதைப்பற்றிக் குறிப்பிட்டார். “ஆக்ஷன் படத்தில் நடிக்க இருப்பதாக சந்தானம் சொன்னபோது, அவரால் முடியுமா என்று நினைத்தேன். ஆனால், அவர் நிஜ வாழ்க்கையிலேயே ஆக்ஷன் நடத்தி, தான் ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபித்து விட்டார். அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா, அடிபட்டவன்...” என்று சந்தானத்தைக் கலாய்த்தார் ஆர்யா.
கடைசியாகப் பேசிய சந்தானம், படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட ஆர்யா மற்றும் இயக்குநர் ராஜேஷுக்கு நன்றி தெரிவித்தார். “காமெடியனாக இருந்த நான் ஹீரோவாக ஆனதற்கு காரணம், என் தம்பிகளாகிய ரசிகர்கள் நீங்கள்தான். என் அம்மா, குடும்பம், என் டீம் எல்லாரும் காமெடியனாக மட்டுமே என்னை நடிக்கச் சொன்னபோது, ஹீரோவாக நடிக்கச் சொன்னது ரசிகர்கள்தான்.
நான் ‘லொள்ளு சபா’வில் நடித்துக் கொண்டிருந்தபோது, ‘உங்கள் ரசிகன்’ என்று பலர் என்னிடம் கூறுவார்கள். ‘எனக்கெல்லாம் எதுக்கு ரசிகர்கள்?’ என்று அப்போது கேட்டிருக்கிறேன். ஆனால், உங்களால்தான் நான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். நான் ஹீரோவாக ஆனது முக்கியமல்ல. என் ரசிகர்களாகிய நீங்கள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வேண்டும்” என நெகிழ்ச்சியாகப் பேசினார் சந்தானம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.