வானத்தைப்போல சீரியல் ஷூட்டிங்கின்போது காலில் தீப்பிடித்தது குறித்து நடிகர் ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஸ்ரீகுமார். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கனேஷின் மகனான இவர், தற்போது தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஜீதமிழில் இவர் நடித்த யாரடி நீ மோகினி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீகுமாருக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து சன்.டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடித்து வந்த நடிகர் தமன் விலகியதை தொடர்ந்து ஸ்ரீகுமார் சின்ராசு கேரக்டருக்காக நடிக்க வந்தார். தற்போது வானத்தைப்போல சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
இதனிடையே வானத்தைப்போல சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கருப்பசாமி கெட்டப்பில் இருக்கும் ஸ்ரீகுமார் ஒரு கையில் தீப்பந்தம் மறு கையில் அரிவாள் வைத்துக் கொண்டு வில்லனிடம் சண்டை போடுகிறார். இரண்டு முறை வில்லனை எட்டி உதைக்கும் அவர், அடுத்து தீப்பந்தத்தை அவர் மீது வீசுகிறார்.
அதில் இருந்து தீப்பொறி பறக்கும் நிலையில், தீப்பந்தம் திடீரென கழன்று ஸ்ரீகுமாரின் காலில் சுற்றிக்கொள்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஸ்ரீகுமார், காலுக்கு பக்கத்தில் தீப்பந்தம் விழுந்தாலும் நல்லவேளையாக நானும் என்னுடன் சண்டையிட்டவரும் தப்பித்தோம் கடவுளுக்கு நன்றி சண்டியிடும்போது ஆபத்துதான் ஆனால் அதையும் நான் ரசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு கவனமாக நடிக்கும்படி கூறி வருகின்றனர். உங்களின் நடிப்பு அர்ப்பணிப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என்று கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil