கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 16 மொழிகளில் 40,000 ஆயிரத்துக்கும் மேலான பாடல்களை பாடியவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ரசிகர்களால் அன்புடன் எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று தான் விரைவில் குணமடைந்து வருவேன் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், எஸ்.பி.பி-யின் ரசிகர்கள், அவருடைய சினிமா உலக நண்பர்கள், சினிமா துறையினர் என பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அனைவரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து, அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்றட்டுள்ளதாக எஸ்.பி.பி-யின் மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். நேற்று முன் தினம், எம்.ஜி.எம் மருத்துவமனை எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் அவருடைய உடல்நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவித்தது. அவருக்கு உயிர் பாதுகாப்பு உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தது.
இதனிடையே, இயக்குனர் பாரதிராஜா பாடகர் எஸ்.பி.பி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று ஆகஸ்ட் 20ம் தேதி மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டு பிரார்த்தனையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனை எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி-யின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ-வில் சிகிச்சையில் உள்ளார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ வல்லுனர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனைத்து வருகின்றனர் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.