பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்ஹ்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே முடக்கி வைத்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகியோர் கொரொனா பாதிக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லேசான சளி, காய்ச்சல் அறிகுறிகள் மட்டும் இருப்பதாகவ்ம் மேலும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவிதுள்ளார்.
இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “இரண்டு மூன்று நாட்களாக சிறிது அசௌகரியமாக இருந்தது. அசௌகரியம் என்றால் சளி, காய்ச்சல் இருந்தது. மற்றபடி எனக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதை நான் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால், நான் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். பரிசோதனையில் மிகவும் மிகவும் லேசான அறிகுறிகள் உடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருதுவர்கள் நீங்கள் வீட்டிலே தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். ஆனால், நான் அதை செய்ய விரும்பவில்லை. குடும்பத்தினருடன் இருப்பது கவலையாக உள்ளது. அதனால், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நண்பர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் என்னை நல்லமுறையில் கவனித்துக்கொள்கிறார்கள். நானும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. அதனால், யாரும் கவலைப்பட வேண்டாம். நான் எப்படி இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள யாரும் போனில் அழைக்க வேண்டாம். சளி, காய்ச்சல் தவிர, நான் முற்றிலும் நல்ல நிலையில் இருக்கிறேன். காய்ச்சல் சரியானதும் 2 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவேன். உங்களுடைய கவலைகளுக்கு நன்றி. பலரும் எனக்கு போனில் அழைக்கின்றனர். எல்லா அழைப்புகளையும் என்னால் ஏற்க முடியவில்லை. நான் முழுவதும் ஓய்வு எடுப்பதற்காகவும் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவும் வந்திருக்கிறேன். யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். உங்களுடைய அன்பான அக்கறைகளுக்கு நன்றி. யாரும் கவலைப்பட்டு போனில் அழைக்க வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.