நடிகர் கமல்ஹாசனை, சிவாஜி குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு வரவழைத்து விருந்து படைத்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு மடல் ஒன்றையும் பரிசு அளித்துள்ளனர். விருந்தில் கமலுடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார்.
பரிசு மடலில் தெரிவித்து இருப்பதாவது:
அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி.
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலகநாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு வாழ்ந்திடுக நூறாண்டு!
அன்புடன் அன்னை இல்லம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு நன்றி தெரிவி்த்து கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என பதிவிட்டு உள்ளார்.
விருந்தில் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அண்ணன், ராம் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.