Sivaji Ganesan: தமிழ் சினிமா வரலாற்றை சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் என தாராளமாகப் பிரித்துக் கொள்ளலாம். காரணம் 1940, 1950-களில் தமிழ் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே தெலுங்கர்கள். தமிழில் அவர்களின் டயலாக்கோடு, நடிப்புப் பொருந்தவில்லை. அதோடு 1950-களில் முன்னாள் முதல்வர்கள் சி.என். அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் திராவிட இயக்கம் வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அவர்களின் ஸ்கிரிப்டும், அதற்கு சிவாஜியின் நடிப்பும் தவிர்க்க முடியாத காம்போவாக அமைந்தது.
மாஸான தருணம்: ’லம்போகினி’ காரை ஹாயாக ஓட்டிச் சென்ற ரஜினி!
பிரபல இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு 1952-ம் ஆண்டு இயக்கிய ”பரசக்தி” என்ற தமிழ் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தனது நடிப்பை தொடங்கினார். இதை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் பி. ஏ. பெருமாள் முதலியர் தயாரித்தார். தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிக்கவிருந்த அந்தப் படத்தில், சிவாஜியை ஹீரோவாக போடும்படி, தயாரிப்பாளரிடம் அவரை பரிந்துரைத்தார் பெரியார். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, சிவாஜிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்றும் நடிக்க வருபவர்கள் பராசக்தி படத்தின் வசனங்களை பேசி, நடித்துக் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சின்னையா மன்றாயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தஞ்சாவூரில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார் சிவாஜி. கணேசமூர்த்தி என்பது இவரது இயற்பெயர். திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜி, ”சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அவரது நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'பராசக்தி’யில் அறிமுகமான சிவாஜி, முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார். எந்த காட்சியையும் இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாக நடிப்பதே சிவாஜியின் பாணி. பல நேரங்களில் எது நடிப்பு, எது உண்மை என பார்வையாளர்களே குழம்பிப் போய் விடுவார்கள்.
வரலாற்று தலைவர்களின் படங்களில் நடிப்பதில் சிவாஜியை யாரும் மிஞ்ச முடியாது ‘இராஜராஜ சோழன்’, ‘கர்ணன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்று. ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், சிவாஜியின் வீர வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
முக்கியப் பொறுப்பில் அமுதா ஐஏஎஸ்: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்
இப்படி பெரும் பேருக்கும், புகழுக்கும் சொந்தக்காரரான சிவாஜி கணேஷனின் நினைவு தினம் இன்று. அவர் மறைந்தாலும், தமிழ் சினிமாவில் அவராற்றிய பங்கு என்றும் நிலைத்திருக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.