பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டரின் மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். சினிமா உலகில் சிவசங்கர் மாஸ்டர் என அன்புடனும் மரியாதையுடனுன் அழைக்கப்படும் நடன இயக்குனர் சிவசங்கர் திருடா திருடி, பாகுபலி, மகதீரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு நடனம் அமைத்து வெற்றிகரமான மாஸ்டராக வலம் வந்தவர். மகதீரா படத்தில் நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சிவசங்கர் மாஸ்டர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களுக்கு நடனம் அமைப்பதோடு மட்டுமில்லாமல், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, தில்லுக்கு துட்டு’உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் முத்திரை பதித்துள்ளார்.
நடன இயகுனர் சிவசங்கர் மாஸ்டருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் சிவசங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவருடைய மருத்துவத்திற்கு நடிகர் சோனு சூட், தனுஷ் இருவரும் உதவ முன்வந்தனர்.
இந்த நிலையில் நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனயிலேயே காலமானார். அவருக்கு வயது 72. தமிழ், தெலுங்கு என 800க்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடன இயக்குனராக பணி புரிந்து, சினிமா உலகில் அனைவராலும் சிவசங்கர் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட அவருடைய மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு நடிகர் சோனு சூட் உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"