தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என்றும், இற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 8-ம்தேதி ஞாயிறு, மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும். இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துவார்.
துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார். பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த , பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார். அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.