தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜெயம்ரவி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதாக தற்போது அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1993-ம் ஆண்டு வெளியான பாவா பாவமாரிடி, 1994-ம் ஆண்டு வெளியான பல்நாட்டி புருஷம் என இரண்டு தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெயம்ரவி. தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு 2004-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் அவரது அண்ணன் மோகன்ராஜா இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, எம்.குமரன், உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி என 4 ரீமேக் படங்களில் இணைந்த இந்த கூட்டணி வெற்றிப்படங்களை கொடுத்தது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இவர்கள் ரீமேக் கூட்டணி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.
இந்த பெயரை மாற்றுவதற்காக இவர்கள் இருவரும் இணைந்த படம் தனி ஒருவன். இந்த படம் இருவருக்குமே நல்ல பெயரை பெற்று தந்த நிலையில், ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு பூலோகம், வனமகன், டிக்டிக்டிக் என வித்தியாசமான படங்களில் நடித்த ஜெயம்ரவி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மன் கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.
தற்போது அகிலன், இறைவன் என படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜெயம்ரவி நடிகராக வருவதற்கு முன்பு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், சத்யா, என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா.
தொடர்ந்து கமல் நடிப்பில் இந்திரன் சந்திரன், ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாமலை, ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமான பாட்சா உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்த சுரேஷ் கிருஷ்ணா கமலின் ஆளவந்தான், விஜயகாந்தின் கஜேந்திரா, தனுஷின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் என பல படங்களை இயக்கியுள்ளர்ர். தமிழில் கடைசியாக அவர், பா.விஜய் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இளைஞன் படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜெயம்ரவி குறித்து அவர் கூறுகையில்,
நான் ஆளவந்தான் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது, எடிட்டர் மோகன் ஜெயம்ரவினை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அதனால் ஆளவந்தான் படத்தில் அவரை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டேன்.ஆனால் சில நாட்கள் சென்றபிறகுதான் எனக்கு தெரிந்தது அவர் என்னிடம் வெறும் உதவி இயக்குனராக இருப்பதற்காக மட்டும் சேரவில்லை என்று.
பின்னாளில் நடிகராக வரவேண்டும் என்பதற்காக கமலின் நடிப்பை அருகில் இருந்து பார்த்து அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார் என்பதை தெரிந்துகொண்டேன். ஆளவந்தான் படம் முடிந்த சில மாதங்களில் ஜெயம் படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வு நடந்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.