தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் வாரிசு படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அனுமதி இல்லாமல் யானைகளை வைத்து படப்பிடிப்பு நடந்தியதாக கூறி விலங்குகள் நல வாரியம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடித்து வரும் படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே வாரிசு படக்குழுவுக்கு விலங்கு நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி 5 யானைகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கவும், உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறி விலங்குகள் நல வாரியம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil