இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா இன்று மரணமடைந்தார்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தாமிரா கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரு பெரும் இயக்குநர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா இருவரையும் இணைத்து படம் இயக்கிய தாமிர அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஆண் தேவதை படத்தை இயக்கினார். சமுத்திரக்கனி ரம்யா பாண்டியன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் கணவன் மனைவிக்குள் இருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வலியுறுத்துவதாக இருந்தது. தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமான ஈடுபட்டு வந்த தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இவரது மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil