பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியர்களில் ஒருவராக இருக்கும் கபிலன், சென்னை அருகம்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். புதுச்சேரியை சேர்ந்த இவர், தில் படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையின் என்ற பாடல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் இடம்பெற்ற ஹிட் பாடல்களை எழுதியுள்ள கபிலன், தசவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் பாடலாசியரியர் கபிலன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வம்புல தும்புல பாடல் எழுதிய கபிலன் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுரை எழுதி வந்த கபிலனின் மகள் தூரிகை இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார் தொடர்ந்து தூரிகையின் உடல் தற்போது சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீயிங்வுமன் என்ற இணைய இதழை நடத்தி வந்த தூரிகை சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil