பிரபல பின்னணி பாடகரான பம்பா பாக்யா இன்று திடீரென மரணமடைந்துள்ள நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆல்பம் பாடல் மூலம் பிரபலமானவர் பம்பா பாக்யா (49). இவரது குரலில் வெளியான அடி எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே என்ற ஆல்பம் பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ள அவர். சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் மூலம் திரைத்துறையில் பாடகராக பிரபலமானார்.
அதற்கு ராவணன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அறிமுகமானாலும் சிம்டாங்காரன் பாடல் அவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2.0, பிகில், சர்வம் தாளமயம், பார்த்தீபனின் இரவின் நிழ்ல் உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். மேலும் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில், பொன்னி நதி காண்போமா என்ற பாடலை பாடியுள்ளார்.
ஆல்பம் பாடல் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவராக வலம் வந்த பம்பா பாக்யா இன்று திடீரென மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை என்பதும், மாரடைப்பினால் இறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil