Tamil Cinema Actor Theepettu Ganesan Death : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் இன்று மரணமடைந்தார்.
தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன் (கார்த்திக்). அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று, விக்ரமுடன் ராஜபாட்டை, அஜித்தின் பில்லா-2, நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், கடந்த 2019-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார்.
பெரும்பாலும் எதார்த்த இயக்குநர் சீனு ராமசாமி படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அஞ்சலி கணேசா.. என பதிவிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும்திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"